Tuesday, September 11, 2018

திருத்தணி முருகன் கோயில்

திருத்தணி முருகன் கோயில், இந்தியா, தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி மலையில் அமைந்துள்ளது. ஆண்டின் 365 நாட்களையும் குறிக்கும்படியாக 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். இக்கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமிது. முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம்.இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர்.

சங்க காலப் புலவரான நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் இக்கோயில் குறித்த குறிப்புகள் காணப்படுகிறது. இக்கோயில் விசயநகர மன்னர்களாலும், உள்ளூர் நிலக்கிழார்களாலும் பேணப்பட்டு வந்தது.

வட பழனி முருகன் கோவில்

சுவாமி : வடபழனி ஆண்டவர்

அம்பாள் : வள்ளி, தெய்வானை

தீர்த்தம் : திருக்குளம்

தலவிருட்சம் : அத்தி மரம்

தலச்சிறப்பு : இத்தலத்தில் பாத ரட்க்சையுடன் (காலணிகள்) முருகன் அருள்பாலிப்பது மற்றும் சுவாமி தாமரைப் பீடத்தின் மீது இருப்பது சிறப்பு சுவாமி வலது பாதத்தை முன் வைத்து இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தல வரலாறு : இக்கோயில் தோன்ற மூல காரணமாக இருந்தவர்அண்ணாசாமி தம்பிரான். தன் நாக்கை அறுத்து திருத்தணி முருகனுக்கு காணிக்கை செலுத்தியவர்.(நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் வழக்கத்திற்கு பாவாடம் என்று பெயர்). இவர் தான் இருந்த வீட்டை சிறிய கீற்றுக் கொட்டகையாக போட்டு அங்கு குறிசொல்லும் மேடை அமைத்து பழநியிலிருந்து வாங்கி வந்த பழநி ஆண்டவர் படத்தை அங்கு வைத்து பூஜை செய்தவர். இவர் வைத்து பூஜை செய்த பழநி ஆண்டவர் படம் இன்றும் சன்னதியின் உட்பிரகாரத்தில் வடக்கு மண்டபத்தில் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. இரத்தினசாமி தம்பிரான் ஆண்டவருக்கு பாவாடம் செய்தவர். இவர் அண்ணாச்சாமி தம்பிரானின் தொண்டர் ஆவார். அண்ணாச்சாமிக்கு பிறகு இவர் காலத்தில் தான் இங்குள்ள முருகப்பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்போதுள்ள கருவறைப் பகுதி உள்ள இடத்தில் செங்கல், சுண்ணாம்புக் கட்டிடம் கட்டப்பட்டது. குறிசொல்லி வந்த மேடையை வடபழநி ஆண்டவர் கோயில் என அழைக்கச் செய்தவரும் இவர்தான். பாக்யலிங்க தம்பிரான்: இப்போதுள்ள வடபழநி கோயிலின் கர்ப்ப கிரகமும், முதல் உட்பிரகாரத் திருச்சுற்றும் மற்றும் கருங்கல் திருப்பணி ஆகியவற்றை செய்வித்தவர் இவர். இவரும் வடபழநி கோயிலுக்கு பாவாடம் தரித்தவர். இவர் காலத்தில்தான் இக்கோயில் மிகவும் புகழ் பெற்று விளங்க தொடங்கியது. இம்மூவரின் சமாதிகளும் வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு வடமேற்காக 1 பர்லாங்கு தொலைவில் இருக்கின்றன. இப்போதுள்ள கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் பழைய குறிமேடை இருந்த இடம் இருக்கிறது. இம்மூன்று சாதுக்களுக்கும் நெற்குன்றம் பாதையில் தனியே திருக்கோயில்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபட ஏதுவாக தினசரி பூஜைகளும் நடைபெறுகின்றன.